புது டெல்லி,
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஆழ்கடல் பாதுகாப்பு பணிக்கான திறன் கொண்ட நிபுன் கப்பல் இந்திய கடற்படையுடன் இணைப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.
ஆழ்கடல் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள ஏதுவாக நிஸ்தார் வகையை சேர்ந்த முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இரண்டாவது கப்பலான நிபுன், இம்மாதம் 31-ம் தேதி இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட உள்ளது.
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறும். இந்த கப்பல் ஆழ்கடல் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கு உதவிடும். இது கப்பல் கட்டுமானம் முதல் செயல்பாட்டு சேவை வரை கடற்படை பயணத்தின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதை குறிக்கிறது.
விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நிபுன் கப்பல் பாதுகாப்பு துறை சார்ந்த கப்பல் கட்டுமான பணிகளில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க நிலை எட்டப்பட்டுள்ளதை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தப் போர் கப்பலில் தேவையான உபகரணங்களை பொருத்தும் பணிகள், சோதனைகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து கடந்த ஜூலை 30-ம் தேதி அன்று இந்த கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிபுன் கப்பல் நீருக்கடியில் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு உதவிடும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கப்பலாகும். நீருக்கடியில் செயல்படும் திறன் கொண்ட இந்த கப்பல் கடல் பகுதியில் சவாலான சூழல்களில் பணியாற்றும் கடற்படை வீரர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.