பஞ்சாப் மாநிலம் சக் தரிவால் கிராமத்தை சேர்ந்தவர் பல்ஜித் சிங் என்ற பிட்டு. இவர் பதான்கோட்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை-44 பகுதியில் உள்ள பாலம் அருகேயுள்ள கடையில் சிசிடிவி கேமரா பொருத்தி, ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரின் நகர்வுகளை கண்காணித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி கேமராவில் பதிவான காட்சிகள் இணையதளம் மூலம் பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து, பல்ஜித் சிங்கை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஜனவரி மாதம் சுஜன்பூர் அருகே உள்ள கடையில் இணைய வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராவை பொருத்தியதை பல்ஜித் சிங் ஒப்புக்கொண்டார். துபாயில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து , இதற்கான வழிமுறைகள் பெற்றதாகவும், ரூ.40 ஆயிரம் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஹ்ஜ்அவரிடமிருந்து சிசிடிவி கேமரா மற்றும் இணைய வைஃபை ரூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
பதான்கோட்-ஜம்மு நெடுஞ்சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுஜன்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதன்பிறகே இந்த உளவு நெட்வொர்க்கை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த உளவு நெட்வொர்க்கின் பாகிஸ்தான் தொடர்புகள் மற்றும் நிதி ஆதாரங்களை கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.