தேசிய செய்திகள்

ஜார்கண்டில் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவர் சங்க தலைவர் மீது மை வீச்சால் பரபரப்பு

இந்தப் பேரணியில் அகில இந்திய மாணவர் சங்க தலைவர் நேகா போரா பங்கேற்றார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த மாணவர்கள் ராஞ்சியில் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் நேற்று சட்டசபை நோக்கி பேரணி நடத்தினர்.

இந்தப் பேரணியில் அகில இந்திய மாணவர் சங்க தலைவர் நேகா போரா பங்கேற்றார். இந்தப் பேரணி பிர்சா சவுக் அருகே சென்றபோது. நேகா போரா மீது ஒருவர் மை வீசினார். இதனால் பேரணியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் அமர்நாத் பாண்டே என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது.

நேகா போரா, உமர் காலித் ஆதரவாளர் என்பதால், இந்த செயலில் ஈடுபட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் ஜார்கண்டில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.