புதுடெல்லி,
இஸ்லாமியர்களிடையே மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால், 3 முறை தலாக் கூறும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை எதிர்த்து முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண்கள் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறை, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்ததுடன், இதற்கு தடை விதிக்கும் பொருட்டு சட்டத்திருத்தம் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய அரசு நடவடிக்கையை எடுத்தது.
முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. வாய்மொழியாக, எழுத்துப்பூர்வமாக, இ-மெயில் உள்பட தகவல்தொடர்பு உபகரணங்கள் மூலம் உடனடியாக முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்காக நீதிமன்றத்தை நாடவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் முத்தலாக் மசோதா ஒரு சதிதிட்டம் போன்றுதான் தெரிகிறது, நிறுத்திவைக்க வேண்டும் என அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) கூறிஉள்ளது. மசோதாவை நிறுத்தி வைக்கவும், திரும்ப பெறவும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. மசோதாவில் இடம்பெற்று உள்ள ஷரத்துக்களை ஆய்வு செய்கையில், இஸ்லாமியர்களிடம் இருந்து விவகாரத்து பெறும் அதிகாரத்தை முடக்குவதற்கான சதிதிட்டம் போன்றுதான் தெரிகிறது, என ஏஐஎம்பிஎல்பி செய்தித் தொடர்பாளர் நோமானி கூறிஉள்ளார்.
அரசு முத்தலாக நடைமுறையை நிறுத்த விரும்பினால், முதலில் எங்களுடைய கருத்தை கேட்கவேண்டும். இஸ்லாமிய சட்டத்தின் அரசியலமைப்பு ஷரத்துக்களின்படி இப்பிரச்சனையை தீர்க்க நாங்கள் உதவி செய்வோம், என்று குறிப்பிட்டு உள்ளார்.