தேசிய செய்திகள்

உளவு துறை எச்சரிக்கை எதிரொலி; டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய ஆகஸ்டு 15 வரை தடை

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய நாளை காலை முதல் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடையும் வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் வரும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சுதந்திர தினத்திற்கு முன்பு ஆள் இல்லா விமானம் மூலம் டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதென கூறப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ந்தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில் டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் காஷ்மீர் பகுதிகளில் ஆள் இல்லா விமானம் மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் உளவுத்துறையின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

ஆபரேசன் ஜிகாத் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் இந்த தாக்குதலை டெல்லியில் நடத்த கூடும் என கூறப்படுகிறது.

இதற்கேற்றாற் போன்று, உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அல் கொய்தா இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள், சுதந்திர தினத்தினை முன்னிட்டு பெரிய அளவில் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், நாளை காலை முதல் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடையும் வரை டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்