லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் போலி கால்சென்டர் நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் சர்வதேச அளவில் மோசடி நடைபெற்று வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அடுக்குமாடி கட்டிடத்தின் 11-வது மாடியில் 2 அலுவலகங்களில் செயல்பட்டு வந்த சர்வதேச கால்சென்டரில் சைபர் கிரைம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த சென்டர், இரவு நேரத்தில் மட்டும் செயல்பட்டு வந்துள்ளது. அவர்கள் 'டாலர் ஆப்' என்ற செயலியை பயன்படுத்தி, தொழில்நுட்ப மோசடி மூலம் ஏராளமானோரை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 119 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அவர்களால் பயன்படுத்தப்பட்ட 100 மடிக்கணினிகள், 178 செல்போன்கள், இதர டிஜிட்டல் சாதனங்கள், முக்கியமான ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.