தேசிய செய்திகள்

சபரிமலைக்கு நெய் வினியோகம் செய்ததில் ரூ.85 லட்சம் மோசடி.. விசாரணைக்கு உத்தரவிட்ட கேரள அரசு

கலப்படம் நிறைந்த தரம் குறைந்த நெய் வினியோகம் செய்யப்படுவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது.

திருவனந்தபுரம்,

சபரிமலைக்கு நெய் வினியோகம் செய்ததில் ரூ.85.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், வரும் வழியில் கலப்பட நெய்யை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மில்மா நிறுவனம் - நெய் வினியோகம்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு முந்தைய காலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் நெய் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அப்போது தரம் குறைந்த நெய் வழங்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து கேரளம் அரசின் பால்வள மேம்பாட்டு நிறுவனமான மில்மா நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்க முடிவு செய்யப்பட்டது

அதன் அடிப்படையில் கடந்த சீசனில் மில்மாவின் பத்தனம்திட்டா உற்பத்தி மையத்தில் இருந்து 1 லட்சத்து 77 ஆயிரத்து 66 லிட்டர் நெய் சபரிமலைக்கு வினியோகம் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு விசாரணை

ஆனாலும் கலப்படம் நிறைந்த தரம் குறைந்த நெய் வினியோகம் செய்யப்படுவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பால்வள மேம்பாட்டு கழக இயக்குனர் சாலினி கோபிநாத் விசாரணை நடத்தினார்.

சோதனை செய்யாத அதிகாரிகள்

விசாரணையில், மில்மா வழங்கிய நெய்க்கு பதிலாக சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த கலப்பட நெய்யை 'மில்மா' டின்களில் அடைத்து சபரிமலைக்கு வினியோகம் செய்துள்ளனர். இதனை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை செய்யாமல் இருந்ததும் தெரிய வந்தது.

விசாரணைக்கு உத்தரவு

மேலும் இந்த முறைகேட்டில் மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்ததும் அம்பலமாகி உள்ளது. அந்த வகையில் ரூ.85.73 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த மோசடி குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.