தேசிய செய்திகள்

ஈரான் மோதல்; இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு எத்தனை நாட்களுக்கு வரும்? வெளியான தகவல்

கையிருப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்கான கச்சா எண்ணெய் மற்றும் 25 நாட்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு உள்ளது. இதனால் மொத்தம் 8 வாரங்களுக்கு தேவையான கச்சா மற்றும் பெட்ரோலிய பொருட்களின் இருப்பு நம்மிடம் உள்ளது.

இதனால், கச்சா எண்ணெய், சமையல் கியாஸ் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறோம் என அரசு கூறியுள்ளது. மேற்காசிய நாடுகளிடம் இருந்து பெரிய அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய கூடிய நாடாக இந்தியா உள்ளது.

இந்த சூழலில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான மந்திரி ஹர்தீப் சிங் பூரி இன்று, கச்சா எண்ணெய், சமையல் கியாஸ் மற்றும் பிற பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றை விநியோகம் செய்வதற்கு எவ்வளவு கையிருப்பு உள்ளது? என்பது பற்றி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் அவர் மறுஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின்பு பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், எதிர்வரும் சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கையிருப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.