டெல்லி,
ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. அதேவேளை, அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடப்பதாக சரக்கு கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் கப்பல்களில் பயணிக்கும் இந்திய மாலுமிகள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சியுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அராக்சியுடன் உரையாடினேன். மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றம் குறித்த கவலையை தெரிவித்தேன். வணிக கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்களை எந்த சூழ்நிலையிலும் தவிர்க்க வலியுறுத்தினேன். யார் தாக்குதல் நடத்தினாலும், இதுபோன்ற தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியாக தீர்க்க இந்தியா எப்போதும் துணை நிற்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.