தேசிய செய்திகள்

கேரள லாட்டரி தமிழகத்துக்கு கடத்தப்படுகிறதா? - சோதனை தீவிரம்

லாட்டரி சீட்டுகளுடன் பிடிபடுவோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

பாலக்காடு,

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் லாட்டரி சீட்டுகளை வைத்திருப்பதும் விற்பனைக்காக கொண்டு செல்வதும் சட்டவிரோதமாகும். லாட்டரி சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும். அதிக அளவில் லாட்டரி சீட்டுகளுடன் பிடிபடுவோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிலர் வாளையாருக்கு வந்து கேரளம் லாட்டரி வாங்கி செல்கின்றனர். சிலர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், சிலர் விற்பனை நோக்கத்துடனும் வாங்குகின்றனர். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு வாளையார் எல்லையில் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிற்கு செல்லும் வாகனங்களில் கேரள லாட்டரி உள்ளதா என்பதையும், கேரளத்திற்குள் வரும் வாகனங்களில் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படுகிறதா? என்பதையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். தமிழக பஸ்சில் பயணம் செய்த 4 பேர் கேரள லாட்டரி சீட்டுகளுடன் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர். எல்லைப்பகுதியில் சோதனைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.