நாக்பூர்,
இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 3-ஆம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஆனால் முன்கூட்டியே கசிந்த வினாத்தாள் விவகாரம் காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறு தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேர்வர்களுக்கு புதிய ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
அபிதாபியில் தேர்வு மையம்
இந்நிலையில் நாக்பூரைச் சேர்ந்த நீட்-யுஜி (NEET-UG) தேர்வுக்குத் தயாராகும் மாணவர் ஒருவருக்கு, அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர் அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் தேசிய தேர்வு முகமையிடம் (NTA) முறையீடு செய்துள்ளனர்.
மற்றொரு மாவட்டத்திற்கு பயணம் செய்ய குறைந்த நேரமே உள்ளதாலும், இந்த எதிர்பாராத ஒதுக்கீடு மாணவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாலும், நாக்பூரையே தேர்வு மையமாக ஒதுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சர்ச்சை குறித்து பதிலளித்த தேசிய தேர்வு முகமை தலைமை இயக்குநர் அபிஷேக் சிங், உடனடிப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், ஹால் டிக்கெட்டில் அபுதாபியில் தேர்வு மையம் என குறிப்பிடப்பட்டு இருந்த தவறை தேசிய தேர்வு மையம் ஒப்புக்கொண்டது. தொழில்நுட்பக் கோளாறால் இந்த தவறு நடந்துவிட்டது என்றும், மாணவர் அபுதாபிக்கு செல்ல வேண்டாம் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், தனது சொந்த ஊரான நாக்பூரிலேயே மாணவருக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்து, புதிய ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுவிட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த சர்ச்சை குறித்து தேசிய தேர்வு முகமை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.