தேசிய செய்திகள்

இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

இஸ்ரேல் - ஈரான் போர்ப்பதற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனிடையே, உலகளவில் 20 முதல் 30 சதவிகித கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் மேற்கொள்ளப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடமாக அறியப்படுகிறது.

தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை மூடி விடுவோம் என்று ஈரான் நீண்டகாலமாகவே எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி விட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஈரான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் பெறப்படவில்லை.

ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் மூடப்படுவதாய் இருந்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஏனெனில், இந்தியா தனது 80 முதல் 90 சதவிகித கச்சா எண்ணெய்யை இறக்குமதிதான் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.