தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு துப்பாக்கிகளை வழங்கிய இஸ்ரேல் நிறுவனம்

அடுத்த கட்டமாக 4 ஆயிரம் துப்பாக்கிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்பட உள்ளதாக கூறி உள்ளது.

இஸ்ரேல்,

இஸ்ரேலை சேர்ந்த இஸ்ரேல் ஆயுத தொழில்கள் (ஐ.டபுள்யு.ஐ.) நிறுவனம், இந்திய ராணுவத்துக்கு 'நெகவ் 7.22 மி.மீ.' என்ற இலகு ரக துப்பாக்கிகளை தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்தது. இதற்காக 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், அதானி டிபென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து துப்பாக்கிகளை தயாரித்து வழங்கியது.

மொத்தம் 41 ஆயிரம் துப்பாக்கி கள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் முதல்கட்டமாக 2 ஆயிரம் துப்பாக்கிகள் இரு நிறுவன கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டு கடந்த 28-ந்தேதி இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தகவலை இஸ்ரேலிய நிறுவனமும் தற்போது உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

“இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியின் கீழ் தொழில்நுட்பப் பரிமாற்ற செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது." என்று கூறியுள்ள அந்த நிறுவனம் அடுத்த கட்டமாக 4 ஆயிரம் துப்பாக்கிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்பட உள்ளதாக கூறி உள்ளது.