புதுடெல்லி,
டெல்லியில் 49வது நினைவு நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மக்களவை துணை சபாநாயகர் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.யான தம்பிதுரை இன்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களையே மத்திய அரசு காலம் கடந்து அறிமுகப்படுத்துகிறது என கூறினார்.
தொடர்ந்து அவர், தமிழகத்திற்கான உரிமை பறிபோக கூடாது. தமிழகத்தில் ஆட்சியையும், அ.தி.மு.க.வையும் நாங்கள் காப்பாற்றுவோம். ஜி.எஸ்.டி.யால் தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என கூறினார்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால் நல்லது. இதனால் செலவு குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.