தேசிய செய்திகள்

எங்கள் மதம்... நாங்கள்தான் முடிவு செய்வோம்; அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்புக்கு ஓவைசி கடும் எதிர்ப்பு

இந்த விவகாரம் அரசியல் சாசனத்தின் 19 மற்றும் 25-வது பிரிவுகளுக்கு எதிரானது என்று ஓவைசி கூறினார்.

ஐதராபாத்,

பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய முஸ்லிம் மாணவியின் மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு இஸ்லாம் மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.அவர் கூறுகையில், “எங்கள் மதத்தில் எது முக்கியமானது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். அதை நீதிபதிகள் முடிவு செய்ய வேண்டியதில்லை. இது எங்கள் மதத்தின் மீதான தாக்குதல்” என்றார்.

பிரயாக்ராஜில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர விரும்பிய மாணவி, பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பள்ளியின் சீருடை விதிமுறைகளை தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மாற்றிக்கொள்ள மாணவர்களுக்கு உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் கட்டாய நடைமுறை அல்ல என்று நீதிமன்றம் கூறியதற்கும் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் அரசியல் சாசனத்தின் 19 மற்றும் 25-வது பிரிவுகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.“சீருடையில் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது சமத்துவம் ஆகாது. அந்த மாணவி தலையில்தான் ஹிஜாப் அணிந்துள்ளார்; மனதில் அணியவில்லை” என்றும் ஓவைசி தெரிவித்தார்.