புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்த பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று (31-ந் தேதி) டெல்லி வருகிறார். இதை மத்திய வெளியுறவு அமைச்சம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று இரவு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது உக்ரைன் நெருக்கடி, இந்தோ-பசிபிக் நிலைமை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசினார்.
இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில், அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கனுடன் பயனுள்ள உரையாடலை முடித்தேன். இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தோம். இந்தோ-பசிபிக், உக்ரைன் மற்றும் உலகப் பொருளாதாரம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.