புதுடெல்லி,
பிரதமர் மோடி பிரான்ஸ், அமீரகம், பஹ்ரைன் நாடுகளில் கடந்த 22-ந் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று பஹ்ரைன் சென்ற அவர், இன்று மீண்டும் பிரான்ஸ் செல்கிறார். அங்கு நாளை வரை நடைபெறும் ஜி-7 மாநாட்டை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். எனவே அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தை பாதியில் முடித்து விட்டு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் திட்டமிட்டபடியே தொடரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அருண் ஜெட்லியின் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்துவார் என கூறப்பட்டு உள்ளது.
ஜெட்லியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், அவரது மனைவி மற்றும் மகனுக்கு தொலைபேசி வழியாக இரங்கல் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.