புதுடில்லி,
சிறு குற்றங்களை குற்றமற்றதாக்குவதுடன், சிறை தண்டனைக்கு பதிலாக அபராதங்கள் விதிக்கும், ஜன் விஷ்வாஸ் சட்டப்பிரிவுகளின் திருத்த மசோதா, 2026, மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
பல்வேறு சட்டங்களின் கீழ் வரும் சிறிய குற்றங்களை, குற்றமற்றவையாக்குவதற்காக, 'ஜன் விஷ்வாஸ் சட்டப் பிரிவுகள் திருத்த சட்டம்' 2023ல் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. 19 அமைச்சகங்கள் அல்லது துறைகளால் நிர்வகிக்கப்படும் 42 மத்திய சட்டங்களின் 183 பிரிவுகள் குற்றமற்றதாக மாற்றப்பட்டன. இந்த மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜன் விஷ்வாஸ் சட்டப்பிரிவுகள் திருத்த மசோதா மக்களவையில் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி, சிறிய தவறுகளுக்கு சிறைக்கு பதிலாக அபராதம் விதித்தல் அல்லது எச்சரித்தல், முதல்முறை குற்றங்களுக்கு எச்சரிக்கை விடுத்தல் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டு, நாடாளுமன்றம் தேர்வுக் குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஜன் விஷ்வாஸ் திருத்த மசோதா குறித்து பல்வேறு அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்திய தேர்வுக் குழு, கடந்த 13ந் தேதி இது தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
பின்னர் அந்த மசோதாவில் மாற்றங்கள் செய்ய விரும்பிய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல், ஜன் விஷ்வாஸ் திருத்த மசோதா, 2025ஐ கடந்த 18ம் தேதி திரும்பப் பெற்றார். இந்நிலையில், ஜன் விஷ்வாஸ் சட்டப்பிரிவுகள் திருத்த மசோதா, 2026ஐ, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி ஜிதின் பிரசாதா லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்தார்.