மேதினிநகர்
ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன.
ஜார்கண்ட் மாநிலத்தின் பலாமு மாவட்டத்தில் பர்காகனா-சோன்நகர் பிரிவில் சபவனா கிராமம் அருகே கார்வா சாலை மற்றும் சிக்சிகி ஆகிய இரு ரெயில் நிலையங்களுக்கு இடையே நிலக்கரி ஏற்றி கொண்டு சென்ற சரக்கு ரெயில் ஒன்று திடீரென இன்று விபத்தில் சிக்கியது.
இதில், ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தகவல் பற்றி அறிந்ததும் ரெயில்வேயின் நிவாரண மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
ரெயில் தண்டவாளம் பழுது பார்க்கும் மற்றும் ரெயில் சேவையை மீண்டும் தொடர செய்யும் பணிகளும் விரைவாக நடந்து வருகின்றன. இந்த சம்பவம் பற்றி விசாரணையும் நடந்து வருகிறது. அதன் பின்னரே தெளிவான விவரம் தெரிய வரும் என ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.