டான்ஸ் ஆடிய மாணவர்கள் 
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நோக்கி பேரணி: நீரை பீய்ச்சியடித்த போலீஸ் - ஜாலியாக டான்ஸ் ஆடிய மாணவர்கள்

மாணவர்கள் திரண்டு தலைநகர் ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் மீது போலீசார் நீரை பீய்ச்சி அடித்த நிலையில், அதற்கு அஞ்சாத மாணவர்கள் தண்ணீரில் நனைந்தபடி ஜாலியாக டான்ஸ் ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வினாத்தாள் கசிவு

ஜார்க்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் கூறி அங்குள்ள மாணவ, மாணவிகள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

முற்றுகை போராட்டம்

அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு தலைநகர் ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இவர்களை தடுக்க ஆங்காங்கே போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து, பலத்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியிருந்தனர்.

தடியடி, கண்ணீர் புகை

மாணவர்கள் போலீசாரின் தடுப்புகளை உடைக்க முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. கூட்டத்தை கலைக்க போலீசார் முதலில் தடியடி நடத்தினர். பின்னர் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். அப்போதும் மாணவர்கள் கலைந்து செல்லாததால், ராட்சத 'வாட்டர் கேனான்' வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மாணவர்கள் மீது அசுர வேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

ஜாலியாக நடனமாடிய மாணவர்கள்

போலீசார் தண்ணீரை அடித்ததும் மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்குதான் 'ஜென்-ஜி' மாணவர்கள், போலீஸ் அடித்த தண்ணீரை 'ரெயின் டான்ஸ்' போல் நினைத்து, குத்தாட்டம் போடத் தொடங்கினர். சில மாணவர்கள் போலீஸ் வாகனத்தின் முன்பே நின்று கைகளை தட்டி, உற்சாகமாக நடனமாடினர். "நீங்கள் தண்ணீரை அடித்து எங்களை கலைக்க முடியாது" என்று சவால் விடுப்பது போல, தண்ணீரில் நனைந்தபடியே அவர்கள் ஆடிய டான்ஸ் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி, லைக்குகளை குவித்து வருகிறது.

ஸ்ட்ரெச்சரில் வந்த தலைவர்

இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக, கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர் தலைவர் தேவேந்திர நாத், ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே பேரணிக்கு வந்து மாணவர்களுக்கு ஆதரவு தந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.