தேசிய செய்திகள்

ஜார்கண்ட்: அரசு பணிக்கான தேர்வுகளை ரத்து செய்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை

ஜார்கண்ட் அரசின் தேர்வு ரத்து நடவடிக்கையால் மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் இடையே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மாணவர்களின் போராட்டம் காரணமாக ஜார்க்கண்டில் காங்கிரஸ் தயவில் ஆட்சியில் இருக்கும் ஹேமந்த் சோரன் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, போட்டி தேர்வுகளை ரத்து செய்வதாக ஹேமந்த் சோரன் அறிவித்தார். இதன்படி, ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட 44 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.

அதற்கான பட்டியலையும்வெளியிட்டது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தையும் முடித்தனர். எனினும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையே, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்வுகளை ரத்து செய்த அரசின் முடிவுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஜார்கண்ட் ஐகோர்ட்டு, அந்த உத்தரவுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதனால் ஏற்கனவே தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிக்காக காத்திருக்கும் தேர்வர்களுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது. ஜார்கண்ட் அரசின் தேர்வு ரத்து நடவடிக்கையால் மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் இடையே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது