தேசிய செய்திகள்

ஜார்கண்ட்: போலீசார்-மாணவர் மோதல் தொடர்பாக 3 எப்.ஐ.ஆர்.கள் பதிவு

அவற்றில் 28 பேரின் பெயர்களுடன், அடையாளம் தெரியாத 900 பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ராஞ்சி

ஜார்கண்டில் போலீசார்-மாணவர் மோதல் தொடர்பாக 3 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன.

ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு பணியாளர் நியமன தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறி மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. 24 நாட்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், உண்ணாவிரத போராட்டத்திலும் மாணவர்கள் ஈடுபட்டனர்.

தேர்வில் முறைகேடு

அந்த மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட ஜே.எஸ்.எஸ்.சி.-சி.ஜி.எல். தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்றும் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தம் தேவை என்றும் அப்போது வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அரசு பணியாளர் நியமன தேர்வை ரத்து செய்து முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார். அதனுடன், டேட்டா புராசஸிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்புடைய அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

இதனால், 16 நாட்களாக நடந்து வந்த உண்ணாவிரத போராட்டம் முடித்து கொள்ளப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்தனர்.

இடைக்கால தடை

எனினும், தேர்வு ரத்து தொடர்பான சில நோட்டிஸ்களுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனால், அதிருப்தியடைந்த மாணவர்கள் அரசு தங்களை மோசடி செய்து விட்டது என கூறியதுடன், கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிரிதி மற்றும் ஹசாரிபாக் நகரங்களில் கடந்த வெள்ளிக்கிழமை அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அவரை திட்டியதுடன், போக்குவரத்துக்கு இடையூறாகவும் நடந்து கொண்டனர். இதனால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

எப்.ஐ.ஆர்.கள் பதிவு

இந்த நிலையில், அரசு பணிக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் போலீசாரை தாக்கியது தொடர்பாக இதுவரை 3 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் 28 பேரின் பெயர்களும், அடையாளம் தெரியாத 900 பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஏனெனில், 4 காவல் நிலையங்களின் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 8 போலீசார் காயமடைந்து உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த சூழலில், இதற்கு எதிர்க்கட்சி தலைவர் பாபுலால் மராண்டி, மாணவர்களுக்கு எதிரான எப்.ஐ.ஆர். பதிவுகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லையெனில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.