ராஞ்சி
ஜார்கண்ட் டி20 லீக் கிரிக்கெட் இறுதி போட்டியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பலர் காயம் அடைந்தனர்.
ஜார்கண்டின் ராஞ்சி நகரில் ஜார்கண்ட் பிரீமியர் டி20 லீக் கிரிக்கெட் இறுதி போட்டி நடந்தது. போட்டியை காண நுழைவு கட்டணம் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டது. போட்டியை பார்ப்பது இலவசம் என அறிந்ததும், நிறைய பேர் ஆவலாக சென்றனர். அப்போது, ரசிகர்கள் திரண்டு வந்ததில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அதிக அளவில் கூட்டம் கூடியதும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய அதிகாரிகள் நுழைவு வாயிலை மூட உத்தரவிட்டனர். இதனால், கதவுக்கு வெளியே கூட்டம் திரண்டிருந்தது. அப்போது சிலர் கதவுகளின் மீதும், சுவர்களின் மீதும் ஏறி செல்ல முயன்றனர். இதனால், கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். இதுபற்றி சுகாதார மந்திரி இர்பான் அன்சாரி கூறும்போது, கூட்ட நெரிசலில் சிலர் காயமடைந்தனர். எனினும், அச்சப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என கூறினார். ஆம்புலன்சுகள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.
இந்த சம்பவத்தின்போது, சிலருடைய பர்ஸ் திருடப்பட்டது. பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. காலணிகள் பல இடங்களில் கழன்று கிடந்தன. இளம்பெண்கள் கீழே தள்ளி விடப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு காயமும் ஏற்பட்டு உள்ளது என்று சிலர் கூறினர்.