தேசிய செய்திகள்

கர்நாடகா: 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் குழந்தையை கொண்டு சென்று கேராமங்கலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

பெங்களூரு

கர்நாடகாவில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

கர்நாடகாவின் பெங்களூரு மடிவாளா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கா ஆடுகோடி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநில தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் உள்ள வளாகத்தில் நின்று குழந்தை விளையாடி கொண்டிருந்தது.

இந்நிலையில், இரும்பு கம்பியால் ஆன தடுப்பு மீது குழந்தை ஏறியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத வகையில், 3-வது மாடியில் இருந்து குழந்தை கீழே தரைதளத்தில் தவறி விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்து குழந்தை உயிருக்கு போராடியது. உடனே ஆம்புலன்சுக்காக காத்திருக்காமல், அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் குழந்தையை கொண்டு சென்று கோரமங்கலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

தீவிர சிகிச்சை

குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் குழந்தை உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மடிவாளா பகுதிக்கு உட்பட்ட பகுதியில் சம்பவம் நடந்துள்ளது. எனினும், நேற்று மாலை வரை போலீசார் வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.