பெங்களூரு,
கர்நாடகாவில் பஸ்சின் முகப்பு 'ஹெட்லைட்' எரியாததால் செல்போனில் டார்ச்லைட் வெளிச்சத்தில் 90 கிலோமீட்டர் தூரம் பயணிகளுடன் அரசு பஸ்சை டிரைவர் ஒருவர் ஓட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பஸ்கள்
அரசு பஸ்களில் முறையான பராமரிப்பின்றியும், ஓட்டை உடைசலுமாக இயங்கி வருவதாக பொதுமக்கள், பயணிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் குற்றம் வைத்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் பஸ்ஸுக்குள் மழைநீர் ஒழுகும் காட்சிகளும், அதில் பயணிகள் குடை பிடித்து செல்வதும் இன்னும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
அந்த வகையில் தான் தற்போது கர்நாடகாவில் பயணிகளின் உயிருக்கு உலைவைக்கும் வகையில் அரசு பஸ்சில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் கலபுரகியில் இருந்து சிஞ்சோலி பகுதிக்கு 'கல்யாண் கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம்' சார்பில் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் கடந்த 15 நாட்களாக 'ஹெட்லைட்' எரியவில்லை என்று கூறப்படுகிறது. 'ஹெட்லைட்' எரியாததால் இரவில் டிரைவர்கள் அந்த பஸ்சை ஓட்டுவதில் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. 'ஹெட்லைட்'டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யவில்லை என டிரைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில் தான் அந்த பஸ்சை நள்ளிரவில் 90 கி.மீ டிரைவர் ஒருவர் செல்போன் டார்ச் லைட் உதவியுடன் ஓட்டி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
ஹெட்லைட்' இல்லாததால் அந்த டிரைவருக்கு நள்ளிரவில் ரோடு சரியாக தெரியவில்லை. இதனால் அவர் கண்டக்டரை முன்பக்க இருக்கைக்கு அழைத்து செல்போனில் டார்ச் லைட்டை அடிக்க சொல்லி 90 கிலோமீட்டர் தூரம் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டர் மட்டுமின்றி பஸ்சில் பயணித்த பயணிகளும் தங்களின் பாதுகாப்பான பயணத்திற்காக டிரைவர் இருக்கை அருகே சென்று செல்போன் டார்ச்லைட்டை 'ஆன்' செய்து வழிகாட்டி உள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் கர்நாடகா அரசின் போக்குவரத்து கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.