தேசிய செய்திகள்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் அடுத்த 2 நாட்களில் நடைபெறும்; முதல் மந்திரி எடியூரப்பா

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் அடுத்த 2 நாட்களில் நடைபெறும் என முதல் மந்திரி எடியூரப்பா பேட்டியில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபையில் 16 இடங்கள் காலியாக உள்ளன. கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் முடிந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார். இடைத்தேர்தல் நிறைவடைந்து சுமார் 50 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த எடியூரப்பா, 3 நாட்களில் மந்திரிசபையை விரிவுபடுத்துவதாக கூறினார். அந்த மூன்று நாட்களும் முடிந்துவிட்டன. இப்போது எடியூரப்பா, ஜனவரி மாத இறுதிக்குள் நிச்சயம் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று திட்டவட்டமாக கூறினார். மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடைபெறும் என்று தகவல் வெளியானது. ஆனால் அதன்படி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை.

இந்நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுவதில் ஏற்படும் காலதாமதத்திற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. முதல்-மந்திரி எடியூரப்பா, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 12 பேரில் 11 பேருக்கு மந்திரி பதவி வழங்க அனுமதிக்குமாறு கட்சி மேலிடத்திடம் கேட்டுள்ளார்.

ஆனால் பா.ஜனதா மேலிடமோ, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 7 பேருக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அவர்களை தவிர்த்து கட்சியில் மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்றும் கூறுவதாக தெரிகிறது. இதை ஏற்க மறுத்துள்ள எடியூரப்பா, தான் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாகவும், அதனால் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற அந்த 11 பேருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் பிடிவாதமாக கூறியுள்ளார்.

இதற்கு பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்க மறுத்து தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக உள்ளது. அதனால் கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி மேலிடத்தின் அனுமதியை பெற, எடியூரப்பா நாளை டெல்லி செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்க நாளை புதுடெல்லிக்கு செல்கிறேன். இதன்பின் வருகிற 1ந்தேதி கர்நாடகாவுக்கு திரும்புகிறேன். மந்திரிசபை விரிவாக்கம் நீண்ட காலத்திற்கு நடைபெறாமல் உள்ளது. அடுத்த 2 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற கூடிய சாத்தியம் உள்ளது என கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு