தேசிய செய்திகள்

காவிரி நீர் விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி அழைப்பு

காவிரி நீரை பங்கிடுவதில் கர்நாடகா - தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது.

பெங்களூரு,

காவிரி நீரை பங்கிடுவதில் கர்நாடகா - தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சினை

இதனிடையே, டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் ,கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து 29ம் தேதி முதல் (இன்று) தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது. ஆனால், காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை. மேலும், இந்த உத்தரவை எதிர்த்து காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டம்

இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.