பெங்களூரு,
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் வேகமாக நிரம்பும் கர்நாடக அணைகள்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பேய் மழையால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு மின்னல் வேகத்தில் எகிறியுள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து நேற்று வரை சீராக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் தற்போது நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்துள்ளது. அணை மிக வேகமாக நிரம்பி வருவதால், அதன் பாதுகாப்பை கருதி எந்த நிமிடமும் விநாடிக்கு 8,000 முதல் 10,000 கன அடி வரை உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் மண்டியா மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கே.ஆர்.எஸ் அணைக்கும் நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 10,504 கன அடியாக உயர்ந்துள்ளது.
கே.ஆர்.எஸ் மற்றும் கபினி ஆகிய கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றின் கொள்ளளவு வேகமாக நிரம்பி வருகிறது. கர்நாடகாவில் உள்ள அணைகள் தங்களின் முழு கொள்ளளவை எட்டும்போது, உபரி நீர் முழுமையாக தமிழக எல்லை வந்தடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.