பெங்களூரு,
கர்நாடகாவில் புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமிற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடை விடுமுறை என்பதால் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசி (33) என்பவர் சுற்றுலாவுக்காக துபாரே முகாமுக்கு சென்றிருந்தார். அப்போது ஆற்றங்கரையில் நின்று யானைகள் குளிப்பாட்டப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், வளர்ப்பு யானைகளான ‘கஞ்சன்’ மற்றும் ‘மார்த்தாண்டா’ என்ற 2 யானைகள் குளிப்பாட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. யானைப்பாகன்கள் கட்டுப்படுத்த முயன்றபோதும், கஞ்சன் யானை மார்த்தாண்டாவை வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய மார்த்தாண்டா யானை கீழே விழுந்தது. அப்போது , அருகில் நின்றிருந்த துளசி யானையின் கீழ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
யானைகள் மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழந்த நிகழ்வை அடுத்து, வன விலங்கு சரணாலயங்களில் திறந்தவெளி வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கர்நாடக அரசு தடைவிதித்துள்ளது. திறந்தவெளி வாகனங்களில் உடையாத கண்ணாடிகள், இரும்பு கம்பிகள் பொருத்தப்பட வேண்டும் என்றும், அவசர காலங்களில் பயன்படும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.