கருப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி 
தேசிய செய்திகள்

கர்நாடகா: கருப்பை வாய் புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு அதிரடி நடவடிக்கை!

இந்திய பெண்களிடையே ஏற்படும் புற்றுநோய் மரணங்களில் கருப்பை வாய் புற்றுநோய் மிக முக்கிய காரணியாக உள்ளது.

பெங்களூரு,

கருப்பை வாய் புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பெண்களை அதிகம் தாக்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில், கர்நாடக அரசு ஒரு வரலாற்று சிறப்புமிக்க சுகாதார திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள 14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்கும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

புற்றுநோய் தடுப்பில் முக்கிய மைல்கல்

இந்திய பெண்களிடையே ஏற்படும் புற்றுநோய் மரணங்களில் கருப்பை வாய் புற்றுநோய் மிக முக்கிய காரணியாக உள்ளது. இதனை ஆரம்பத்திலேயே தடுக்கும் ஆற்றல் தடுப்பூசிக்கு உண்டு. பொதுவாக, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசியை வழங்குவதன் மூலம், எதிர்காலத்தில் அவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை நூறு சதவீதம் தடுக்க முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

தனியார் மருத்துவமனைகளில் பல்லாயிரக்கணக்கில் செலவாகும் 'கார்டாசில்-4' தடுப்பூசி, தற்போது அரசு சார்பில் இலவசமாக போடப்படுகிறது. இதனால் 14 வயது நிரம்பிய அனைத்து சிறுமிகளும் பயனடைவர். இந்த தடுப்பூசி ஆறு மாத கால இடைவெளியில், இரண்டு தவணைகளாக சிறுமிகளுக்கு செலுத்தப்படும்.

முன்பதிவு செய்வது எப்படி?

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த, மத்திய அரசின் U-WIN இணையதளம் (uwin.mohfw.gov.in) அல்லது பிரத்யேக ஆப் மூலம் எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் நேரடியாக சென்றும் இந்த சேவையைப் பெறலாம்.

இத்திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு அரசு வழங்கும் ஒரு மிகச்சிறந்த பாதுகாப்பு கவசமாக பார்க்கப்படுகிறது.