தேசிய செய்திகள்

மேகதாது திட்டத்தை செயல்படுத்துவோம்-கர்நாடக மந்திரி அடம்

தமிழக அரசு பிடிவாத போக்கை கைவிட வேண்டும் என்றும், மேகதாது திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்துவோம் என்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

குடிநீர் தேவை

கர்நாடகா நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி மண்டியா கே.ஆர்.எஸ். அணை பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்கு பிறகு ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கே.ஆர்.எஸ். அணையில் தற்போது உள்ள நீர் குடிநீர் பயன்பாடு, கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்க போதுமானதாக இருக்கும். எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால் விவசாய பணிகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம்.தற்போது உள்ள நீரை விவசாயத்துக்கு திறந்து விட்டால் வரும் நாட்களில் குடிநீர் தேவைக்கு சிக்கல் ஏற்படும். வருகிற 15-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.

மேகதாது திட்டம்

அங்கு என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். மேகதாது திட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு எந்த காரணத்துக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கர்நாடகம், தமிழகம் ஆகிய 2 மாநிலங்களுக்கும் இந்த திட்டத்தால் பயன் கிடைக்கும். அதனால் தமிழக அரசு தனது பிடிவாத போக்கை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.