தேசிய செய்திகள்

வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது விபரீதம்.. 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

கோடை விடுமுறையையொட்டி சிறுமி தனது சித்தி வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சிவமொக்கா,

சிவமொக்கா(மாவட்டம்) தாலுகா லக்கினகொப்பா கிராமம் வித்யாநகர் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். தற்போது 5-ம் வகுப்பு செல்ல இருந்தாள்.

கோடை விடுமுறையையொட்டி சிறுமி தனது சித்தி வீட்டில் இருந்து வந்தாள். நேற்று முன்தினம் சிறுமி தனது வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடினாள். அப்போது கழுத்தை கயிறு இறுக்கியதில் சிறுமி பரிதாபமாக பலியானாள்.

இந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமியின் உயிர் பறிபோனது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் வீடு திரும்பிய சிறுமியின் சித்தி மற்றும் அவரது குடும்பத்தினர், சிறுமி நிலைகுலைந்து கிடப்பதைப் பார்த்து கதறி அழுதனர்.

பதறிப்போன அவர்கள் சிறுமி இறந்தது குறித்து அவளது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் விரைந்து வந்து சிறுமியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.