பெங்களூரு,
கர்நாடகத்தில் போலீஸ் துறையில் 545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வான சிலர் லஞ்சம் கொடுத்து பணியை பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதையடுத்து அந்த தேர்வை ரத்து செய்துவிட்டு அந்த 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காநாடகத்தில் 545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு தேர்வு எழுதிய 54 ஆயிரத்து 289 பேருக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்என்றார்.