தேசிய செய்திகள்

கர்நாடகா: தின்பண்டங்களில் மறைத்து வைத்து கடத்தல்; ரூ.34 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

ரூ.34 கோடி மதிப்பிலான 17 கிலோ 580 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பெங்களூரு

கர்நாடகா தின்பண்டங்களில் மறைத்து வைத்து கடத்திய ரூ.34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஹெப்பால் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் நெட்வொர்க் கும்பலை பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.

இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனால் போலீசார் டெல்லி மற்றும் பெங்களுருவில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் பெங்களூரு ஹெப்பால் பகுதியில் தின்பண்டங்களில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்துவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரூ.34 கோடி

அதன்பேரில் போலீசார் ஹெப்பால் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் தின்பண்டங்களில் மறைத்து வைத்து கடத்தியதாக ரூ.34 கோடி மதிப்பிலான 17 கிலோ 580 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது

இதுதொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் நைஜீரியாவை சேர்ந்த சாலமன் சுக்யூ (வயது 47), மணிப்பூரை சேர்ந்த பெண்ணான ரகாங்மி டானிரோஸ் (வயது 25), பெங்களூருவை சேர்ந்த மோகன்குமார் (வயது 28), ஜான்சன் (வயது 47) என்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.