தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு - தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் தகவல்

கர்நாடகத்தில் அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

கர்நாடகத்திற்கு 1,200 டன் திரவ ஆக்சிஜனை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நாங்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இது கிடைத்துள்ளது. மேலும் கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனை கர்நாடகத்திற்கே ஒதுக்குமாறு கேட்டோம். அதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர ஆகும் போக்குவரத்து நேரம் மிச்சமாகும்.

கர்நாடகத்தில் அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முன்வரும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். இதுகுறித்த முழுமையான தகவல் விரைவில் வெளியிடப்படும். கர்நாடகத்தில் ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தினசரி சராசரியாக 887 டன் ஆக்சிஜனை மத்திய அரசு வழங்கியுள்ளது. தினமும் ரெயில்களில் ஆக்சிஜன் வருவதால், கர்நாடகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினை குறைந்து வருகிறது. ஒடிசாவில் இருந்து 4 ஆக்சிஜன் டேங்கர்கள் வரவுள்ளன. யாதகிரி, கோலார் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன. கலபுரகியிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜெகதீஷ்ஷெட்டர் கூறினார்.

SCROLL FOR NEXT