தேசிய செய்திகள்

கரூர் கூட்டநெரிசல்: இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழக்கு; வரும் 14ம்தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருந்தது.

புதுடெல்லி,

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கியதை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கை வரும் 14-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டு விசாரிக்கிறது.

அரசு வேலை

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் உள்பட பலரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது. இந்தநிலையில் கரூர் சம்பவத்தில் பலியானவர்களின் 31 பேர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான நியமன ஆணைகளை கடந்த ஜூலை 10-ந்தேதி கரூரில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.

ரத்து செய்த ஐகோர்ட்டு

இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை கடந்த 27-ந்தேதி விசாரித்த நீதிபதி, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

மேல்முறையீடு

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், 'தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய 31 பேரின் தரப்பு வாதத்தை ஐகோர்ட்டு கேட்கவில்லை. எனவே, மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடித்து தீர்ப்பை ரத்து செய்யும் வரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்று அதில் கூறப்பட்டிருந்தது.

ஆகஸ்டு 14-ல் விசாரணை

இந்நிலையில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு வழங்கிய அரசு வேலையை ரத்து செய்த ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீடு மனு மீது, வரும் 14-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.

பாதிக்கப்பட்ட ஆனந்த ஜோதி மற்றும் பிரபாகரன் செல்வகுமார் ஆகியோரின் மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினமே தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.