ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், பட்காமின் அஸ்தர் கலி பகுதியில் பாதுகாப்புப்படையினர் இன்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினரை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும்,கொல்லப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேவேளை,என்கவுன்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.