கோழிக்கோடு,
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் பறம்பில் பஜார் பகுதியை சேர்ந்தவர் முகமது (வயது 72) இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனும் தந்தையை போல ஆட்டோ ஓட்டுநராகவும், இளைய மகன் மெக்கானிக் வேலை செய்து வருகின்றார். முகமது கடந்த 1976-ம் ஆண்டு முதல், அதாவது கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இதே கோழிக்கோடு நகரில் ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, எதிர்பாராதவிதமாக அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது. மனித உடலில் சாதாரண ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால், அது 24 சதவீதமாக குறைந்ததால் நிலைமை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முகமதுவை, ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வீட்டிலேயே முடங்கி கிடந்தது மன அழுத்தம் வாட்டியது. கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர், முகமதுவுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். 'வீட்டிலேயே இருந்தால் மேலும் நோயாளியாகி விடுவீர்கள், எனவே, தனது மீண்டெழுவதற்காக ஆட்டோ தொழிலை தொடர வேண்டும் என்று அவர் ஊக்கமும், தைரியமும் அளித்தார்.
இந்த நிலையில், தனது பயணியர் ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரை நிரந்தரமாகப் பொருத்தியுள்ளார். முகத்தில் எப்போதும் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்தபடியே அவர் தினமும் கோழிக்கோடு வீதிகளில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.