தேசிய செய்திகள்

கேரளா: குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்.எல்.ஏ.க்கள் 84 சதவீதம்; அறிக்கையில் தகவல்

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இந்த விகிதம் 96 எம்.எல்.ஏ.க்களாக (71 சதவீதம் பேர்) இருந்தது.

புதுடெல்லி

கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சி ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் கேரள தேர்தல் கண்காணிப்பு கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வு முடிவு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

தேர்தலில் மொத்தம் வெற்றி பெற்ற 140 வேட்பாளர்களில் 135 பேரின் சுய அறிவிப்புடன் கூடிய பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ததில், 114 எம்.எல்.ஏ.க்கள் (84 சதவீதம் பேர்) அவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகளை கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இந்த விகிதம் 96 எம்.எல்.ஏ.க்களாக (71 சதவீதம் பேர்) இருந்தது.

இவர்களில் 77 வெற்றி வேட்பாளர்களில் 57 சதவீதத்தினர் தீவிர குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். இதுவே, 2021 சட்டசபை தேர்தலில் இந்த விகிதம் 37 எம்.எல்.ஏ.க்கள் (27 சதவீதம்) என்ற அளவில் இருந்தது.

அறிக்கையின்படி, ஒரு வெற்றி வேட்பாளர் மீது கொலை வழக்கு உள்ளது. மற்றொரு வேட்பாளர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. 3 வெற்றி வேட்பாளர்களுக்கு எதிராக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும், அவர்களில் ஒரு குற்றவாளி, தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்காக சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது என தெரிய வந்துள்ளது.

கட்சி ரீதியாக எடுத்து கொண்டால், வெற்றி பெற்ற 59 காங்கிரஸ் வேட்பாளர்களில் 53 பேரும், 26 சி.பி.ஐ. (எம்) வேட்பாளர்களில் 20 பேரும், வெற்றி பெற்ற 3 பா.ஜ.க. காங்கிரஸ் வேட்பாளர்களும் பிரமாண பத்திரங்களில் குற்ற வழக்குகள் உள்ளன என தெரிவித்து உள்ளனர்.

பணக்கார வேட்பாளர்கள் என எடுத்து கொண்டால், 93 எம்.எல்.ஏ.க்கள் (69 சதவீதம் பேர்) கோடீசுவரர்களாக உள்ளனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இந்த விகிதம் 75 எம்.எல்.ஏ.க்களாக (55 சதவீதம் பேர்) இருந்தது.