கோழிக்கோடு
கேரளாவில் 36 ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கி முனையில் பஸ் டிக்கெட் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 71 வயதில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் திருவம்பாடி மற்றும் கூம்பரா பகுதிக்கு இடையே அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ் சேவை செயல்பட்டு வருகிறது. 1990-ம் ஆண்டில் இதுபோன்று பஸ் சேவையின்போது, திருவம்பாடிக்கு பஸ் வந்து சேர்ந்தபோது, நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் பஸ் டிக்கெட் பணம் எல்லாவற்றையும் கொள்ளையடித்து விட்டு தப்பினார்.
அதன்பின்னர் அந்த வழக்கில் முன்னேற்றம் எதுவும் இல்லை. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் அரிக்கோடு பகுதியை சேர்ந்த வி.கே. ஜோஸ் என்பவர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டார். கோர்ட்டு, அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.
இந்த சம்பவத்திற்கு பின்னர், கர்நாடகாவின் மைசூரு நகரில் நரசிம்மராஜா பகுதியில், சிவக்குமார் என்ற பெயரில் வாழ்ந்து வந்துள்ளார். கர்நாடகாவிலேயே திருமணம் முடித்து, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், 36 ஆண்டுகள் கடந்த பின்னர் மைசூரு நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு தற்போது வயது 71. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, போலீசார் அவருடைய வீட்டில் சோதனை போட்டனர். அப்போது கைத்துப்பாக்கி ஒன்றை கைப்பற்றினர்.
அதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரித்ததில், கேரளாவில் 36 ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை வழக்கில் இவருக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, திருவம்பாடி போலீசார், மைசூருக்கு சென்று 71 வயது முதியவரான ஜோசை கைது செய்தனர். இதனை போலீசார் இன்று தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.