தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல் பாதிப்பு; கேரளாவில் 20 ஆயிரம் பறவைகள் அழிப்பு

ஆலப்புழா பகுதியில் உள்ள பண்ணைகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் கோழி, வாத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன. இதில் ஹரிப்பாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் சில பறவைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கால்நடை துறை அதிகாரிகள் அங்கு சென்று பறவைகளின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த சோதனையில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்து, கோழிகள் அனைத்தையும் உடனடியாக அழிக்க மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா உத்தரவிட்டார். அதன்படி நேற்று ஆலப்புழா பகுதியில் உள்ள பண்ணைகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் கோழி, வாத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

மேலும் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருக்கிறதா? சுகாதார துறையினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கோட்டயம் பகுதியில் உள்ள சில பன்றி பண்ணைகளிலும் சுகாதார குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் ஆப்பிரிக்கன் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இதுதொடர்பான தகவலை அடுத்து 7 பேர் கொண்ட மத்திய சுகாதார குழுவினர் ஆலப்புழா சென்றுள்ளனர். அவர்கள் அங்கு ஆய்வு நடத்த உள்ளனர்.

SCROLL FOR NEXT