தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை, வெள்ளம்: 12 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலார்ட்! கொச்சி விமான நிலையம் 4 நாட்களுக்கு மூடல்

கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது, இதனால் நேரிட்ட விபத்து சம்பவங்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக கொச்சி விமான நிலையத்தில் 4 நாட்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. #KeralaFloods #KochiAirport

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இங்கு தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் முகாம்கள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வீடு, வாசல்களை இழந்த இவர்களின் கைகளில் ஒரு காசு கூட இல்லாததால் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மழை சற்று குறைந்த நிலையில் மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் ஏற்கனவே நிரம்பியிருந்த அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

மாநிலம் முழுவதும் உள்ள 30 அணைகளில் தண்ணீர் அதிகரிப்பு காரணமாக ஷட்டர்கள் திறக்கப்பட்டு வெள்ளநீர் ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இடுக்கி, முல்லைப்பெரியாறு உள்பட அனைத்து அணைகளுக்கும் வரும் அதிகமான நீர் நேற்று இரவு முதல் திறந்து விடப்பட்டுள்ளது. மழை காரணமாக ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது, பெரும்பாலான இடங்களில் 30 கி.மீ. வேகத்திலே ரெயில்கள் இயக்கப்படுகிறது. கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகுறிஞ்சி மலர்கள் காலமான இப்போது சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் மூணாறு கேரளாவின் மற்றப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடரும் நிலையில் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு, கோழிக்கோடு, காசர்கோட், மலப்புரம், பாலகாடு, இடுக்கு, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வியாழன் வரையில் ரெட் அலார்ட்டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இங்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் 80 மி.மி. மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தேவையான உதவிகளை செய்வோம் என மத்திய அரசும் உறுதியளித்துள்ளது.

விமான நிலையம் மூடல்

கனமழை, வெள்ளம் காரணமாக கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவையில் ஏற்கனவே பாதிப்பு நிலவியது. கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. இதனால் விமான சேவை முடங்கியுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை விமான சேவைகள் கொச்சி விமான நிலையத்தில் இருக்காது என்றும் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் விமான நிலைய தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் வெள்ளநீர் புகுந்துவிட்டதால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது