தேசிய செய்திகள்

முல்லை பெரியாறு பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை: தமிழக அரசு குற்றச்சாட்டு

நிகழ்நேர கண்காணிப்பு தொழில்நுட்ப தரவுகளை தமிழகத்திற்கு தராமல் கேரள அரசு தொடர்ந்து போக்கு காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் பணியை தாமதமின்றி மேற்கொள்ள வசதியாக, கேரள வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட்டு அனுமதி

இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு நிலை அறிக்கை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

முல்லை பெரியாறு மற்றும் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக இயந்திரங்களை கொண்டு செல்ல ஏதுவாக, கேரள வனப்பகுதியில் சில மரங்களை வெட்ட சுப்ரீம்கோர்ட்டு அனுமதி வழங்கியது. ஆனால், கேரள அரசு மரங்களை வெட்ட இதுவரை அனுமதி வழங்காமல் காலம் கடத்தி வருகிறது.

தொடர்ந்து முட்டுக்கட்டை

முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த, பூச்சு வேலைகளை மேற்கொள்வதற்கு அணையின் கண்காணிப்பு குழு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டுதல்படி பணிகளை செய்யவிடாமலும் கேரளா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

அணையின் பராமரிப்பு பணிகளுக்கு அவசியமான வல்லக்கடவு அணை சாலையை சீரமைக்க தமிழக அரசு சார்பில் 87.64 லட்சம் ரூபாய் நிதி கேரள அரசிடம் வழங்கி பல மாதங்கள் கடந்து விட்டன. எனினும், இதுவரை சாலை பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை கேரள அரசு மேற்கொள்ளவில்லை.

மரங்களை வெட்ட அனுமதி

முல்லை பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டை கணக்கிட கேடக்கப்பட்ட சில முக்கிய தரவுகளை கூட கேரள அரசு இதுவரை வழங்கவில்லை. நிகழ்நேர கண்காணிப்பு தொழில்நுட்ப தரவுகளையும் தமிழகத்திற்கு தராமல் கேரளா தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.

எனவே, அணையை பலப்படுத்தும் பணியை தாமதமின்றி மேற்கொள்ள வசதியாக, கேரள வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். அதேப்போன்று நீதிமன்ற உத்தரவின் படி அணையில் பராமரிப்பு பணிகளை முடிக்கவும் தமிழகத்திற்கு அனுமதி வழங்க மீண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கானது சுப்ரீம்கோர்ட்டில் தற்போது வரையில் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.