ஆலப்புழா,
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அரூர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் ஷானிமோல் உஸ்மான் என்ற பெண், வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணியின் மந்திரி சுதாகரன், காங்கிரஸ் பெண் வேட்பாளரை புந்தனா (அரக்கி) என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். (குழந்தையாக இருந்த கிருஷ்ணரை புந்தனா என்ற அரக்கன் அழகிய பெண் உருவம் எடுத்து, விஷ பாலூட்டி கொல்ல முயல்வதாக புராணக் கதை உண்டு) இந்த சர்ச்சை பேச்சை கண்டித்து அவருக்கு எதிராக ஷானிமோல் உஸ்மான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரூரில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
இதுகுறித்து பெண் வேட்பாளர் ஷானிமோல் உஸ்மான் கூறுகையில், இது தனக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது என்றார்.