தேசிய செய்திகள்

கேரளம்: மந்திரி பதவி ஆசை காட்டி பெண் எம்.எல்.ஏ.விடம் ரூ.3 கோடி பேரம் பேசிய மர்ம நபர்

சந்தேகமடைந்த பெண் எம்.எல்.ஏ. வித்யா, அந்த எம்.பி.யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

கோழிக்கோடு

கேரளத்தில் மந்திரி பதவி கிடைக்க ரூ.3 கோடி தர வேண்டும் என பெண் எம்.எல்.ஏ.விடம் மர்ம நபர் பேரம் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வித்யா பாலகிருஷ்ணன். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவருக்கு கடந்த 6-ந்தேதி செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன்.

ரூ.3 கோடி

கேரளம் மந்திரி சபை விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதில், மந்திரிகள் பலர் மாற்றப்பட உள்ளனர். ரூ.3 கோடி தந்தால், உங்களுக்கு மந்திரி பதவி வாங்கி தருவதாக கூறியுள்ளார். பெண் எம்.எல்.ஏ.விடம் அந்த நபர் இந்தியில் பேசியுள்ளார். மற்றொரு எம்.பி.யின் பெயரையும் அவர் கூறியுள்ளார்.

இதில் சந்தேகமடைந்த பெண் எம்.எல்.ஏ. வித்யா, அந்த எம்.பி.யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர், தன்னிடமும் காங்கிரஸ் கட்சியின் தலைமை செயலகத்தில் இருந்து பேசுகிறேன் என ஒரு நபர் பேசினார். ஆனால், மந்திரி சபை மாற்றத்திற்கு பணம் தருவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.

போலீசில் புகார்

இதனால் சந்தேகமடைந்த பெண் எம்.எல்.ஏ., இந்த சம்பவம் குறித்து கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசில் கடந்த 11-ந்தேதி புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டெல்லியில் இருந்து ஒருவர் செல்போனில் எம்.எல்.ஏ.விடம் பேசியது தெரியவந்தது.

அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். பெண் எம்.எல்.ஏ.விடம் மந்திரி பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.