திருச்சூர் (கேரளா),
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்ளது. கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
உலகளவில் திருமணங்கள் அதிகளவில் நடக்கும் கோவிலாக குருவாயூர் கிருஷ்ணர் கோவில் விளங்குகிறது. ஆவணி மாதத்தில் இங்கு அதிகளவு திருமணங்கள் நடப்பது வழக்கம்.
இந்நிலையில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், மங்களகரமான மலையாள மாதமான 'சிங்கம்' மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 23ம் தேதி அன்று 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அங்கு திருமணங்களுக்கான மும்முரமான சூழல் நிலவுகிறது.
முன்பதிவுகள் இன்னும் திறந்திருப்பதால், இந்த எண்ணிக்கை 400-ஐத் தாண்டக்கூடும் என்று குருவாயூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 30-ஆம் தேதியன்றும் 295 திருமணங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன.
கோவில் தரிசனம் மற்றும் திருமணச் சடங்குகளை சுமூகமாக நடத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்வம் தலைவர் ஏ.வி. கோபிநாத் தெரிவித்தார்.
திருமணங்களைச் சரியான நேரத்தில் நடத்தி முடிப்பதற்காக, ஆகஸ்ட் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருமணங்கள் அதிகாலை 4 மணிக்கே தொடங்கப்படுகிறது. சடங்குகளை நடத்த ஆறு திருமண மண்டபங்கள் அமைக்கப்படும் என்றும், கூடுதல் கோவில் பணியாளர்கள் மற்றும் மங்களவாத்தியக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் குருவாயூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் வழக்கத்திற்கு மாறான கூட்டத்தை கருத்தில் கொண்டு, மணமகன் மற்றும் மணமகளுடன் புகைப்படக் கலைஞர்கள் உட்பட மொத்தம் 24 பேர் மட்டுமே திருமண மண்டபத்திற்கு அருகில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்வம் போர்டு கூறியுள்ளது.
பக்தர்கள் மற்றும் திருமணக் குழுவினருக்கு உதவ தேவஸ்வம் போர்டு பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், கோவில் தரிசனம் மற்றும் திருமணச் சடங்குகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய பக்தர்களின் ஒத்துழைப்பை தேவஸ்வம் போர்டு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 8, 2025 அன்று இக்கோயிலில் சாதனை அளவாக 334 திருமணங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.