திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலம் கொல்லம் கடக்கால் சாரிபரம்பை பகுதியை சேர்ந்தவர் அனீஷ். இவரது மனைவி ஷாலினி (37 வயது). அனீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஷாலினி வீட்டு சமைறைலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
சமையல் கேஸ் சிலிண்டரில் ஒரு விஷப்பாம்பு பதுங்கி இருந்துள்ளது. அதனை கவனிக்காத ஷாலினி கேஸ் சிலிண்டரின் அருகில் நின்றபடி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் பதுங்கியிருந்த பாம்பு ஷாலினியை கடித்துவிட்டது. இதையடுத்து அவர் அஞ்சல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஷாலினிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பாம்பு கடித்ததும் முதலில் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையில், முழுமையாக சிகிச்சை பெறாமல் பாதியிலேயே வீடு திரும்பியதே ஷாலினி மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.