தேசிய செய்திகள்

2 முறை நிராகரிக்கப்பட்ட விசா.. வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க முடியாததால் விரக்தி.. இளம்பெண் அதிர்ச்சி முடிவு

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

இங்கிலாந்துக்கான மாணவர் விசா விண்ணப்பங்கள் 2 முறை நிராகரிக்கப்பட்டதால் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயதுடைய இளம் பெண் ஒருவர், அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

விசா

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பூவச்சல் பகுதியை சேர்ந்த பாபு-சிந்து தம்பதி மகள் அஞ்சனா (வயது 25). பிசிஷியன் அசிஸ்டென்ட் படிப்பை முடித்த இவர், உயர் கல்விக்காக இங்கிலாந்து செல்ல தயாராகி வந்தார். அதற்கான விசாவுக்காக விண்ணப்பித்தார். ஆனால் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதே சமயத்தில் அவருடன் விண்ணப்பித்த மற்றவர்களுக்கு விசா கிடைத்தது. இது அவருக்கு ஏமாற்றத்தை தந்தது.

வாழ்க்கை மீது வெறுப்பு

பிறகு 2-வது முறையாக விண்ணப்பிக்கப்பட்டு, அதுவும் நிராகரிக்கப்பட்டது. எனவே வெளிநாட்டுக்கு சென்று உயர் கல்வி படிக்க முடியவில்லையே என நினைத்தபடி புலம்பிய அஞ்சனா, ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் மீது வெறுப்படைந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென தனது அறைக்கதவை பூட்டிக் கொண்டு தூக்கில் தொங்கினார்.

விசாரணை

குடும்பத்தினர் சந்தேகமடைந்து, அறை கதவை உடைத்தபடி உள்ளே சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய அஞ்சனாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT