வாலிபர் 
தேசிய செய்திகள்

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த வாலிபர்

வாலிபர் சாகசம் செய்வதை கீழே நின்றிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

கொல்கத்தா,

சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' மற்றும் வீடியோக்கள் மூலம் பிரபலமாக வேண்டும் என்ற போதை இன்றைய இளைஞர்களை ஆட்கொண்டுள்ளது. இதன் காரணமாக தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் விபரீத சாகசங்களில் ஈடுபட்டு, அதனை வீடியோவாக பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பரபரப்பான சாலையின் நடுவே, வாலிபர் ஒருவர் செய்த மிரள வைக்கும் காரியம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மின்கம்பத்தின் உச்சியில் உடற்பயிற்சி

கொல்கத்தாவின் முக்கிய சாலை ஒன்றின் மேலே அமைந்துள்ள மிக உயரமான மின்சாரக் கம்பத்தின் உச்சிக்கு வாலிபர் ஒருவர் விறுவிறுவென ஏறியுள்ளார். எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களோ, கயிறுகளோ இன்றி அந்த மின்கம்பத்தின் தொங்கிய அவர், அந்த அந்தரத்திலேயே ஆபத்தான முறையில் 'புல்-அப்ஸ்' மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கினார்.

சாகசங்கள்

கீழே வாகனங்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் வேளையில், சிறிதும் பதற்றமின்றி, மிகவும் நம்பிக்கையோடு இந்த விபரீத உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். காண்போரை திகைக்க வைக்கும் வகையில் அந்த வாலிபர் மிகவும் இயல்பாக இந்த சாகசங்களை செய்தார்.

வீடியோ எடுத்த நண்பர்

அவர் சாகசம் செய்வதை கீழே நின்றிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், மின்கம்பத்தில் தொங்கும் வாலிபர் அவ்வப்போது சற்றே ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் தனது வழக்கமான ஆபத்தான பயிற்சிகளை தொடர்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் மிக வேகமாக பரவி, வருகிறது.