சிறப்பு ரெயில் 
தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை... 254 சிறப்பு ரெயில்களை இயக்கும் கொங்கன் ரெயில்வே

விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.

பனாஜி,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வழித்தடங்களில் 254 சிறப்பு ரெயில்களை இயக்க கொங்கன் ரெயில்வே முடிவு செய்துள்ளது.

254 சிறப்பு ரெயில்கள்

நாடு முழுவதும் செப்டம்பர் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டடிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பெருமளவில் செல்வது வழக்கம். இதேபோல் பெருநகரங்களில் நடைபெறும் விழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொள்வார்கள். இவர்கள் தடையின்றி பயணிக்க வசதியாக கொங்கன் ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு கோவாவின் கொங்கன் ரெயில்வே துணைப் பொது மேலாளர் பாபன் கட்கே கூறியதாவது:-

மொத்தம் 254 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் 246 ரெயில்கள், மத்திய ரெயில்வேயுடன் ஒருங்கிணைந்து செப்டம்பர் 11 முதல் 27 வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும்.

* மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் இருந்து சாவந்த்வாடி, ரத்னகிரி, மட்காவ், மங்களூரு ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

* லோக் மானிய திலக் முனையத்தில் இருந்து ரத்னகிரி, மட்காவ், மங்களூரு ஆகிய இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படும்.

* புனேவிலிருந்து ரத்னகிரி, சாவந்த்வாடி ஆகிய இடங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்படும்.

கூடுதல் சிறப்பு ரெயில்கள்

மேற்கு ரெயில்வேயுடன் இணைந்து 8 கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இவை மும்பை பாந்த்ரா முனையம், குஜராத்தின் வதோதரா, விஸ்வாமித்ரி, வல்சாத் மற்றும் மகாராஷ்டிராவின் புசாவல் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.

இந்த சேவைகள் வெவ்வேறு தேதிகளில் இயக்கப்படும் என்பதால், தேசிய ரெயில் விசாரணை அமைப்பு மற்றும் கொங்கன் ரெயில்வே செயலியின் மூலம் பயணிகள் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை தெரிந்துக்கொள்ளலாம்.

அனைத்து சிறப்பு ரெயில்களுக்குமான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. பயணிகள் தங்கள் வசதியான பயணத்திற்கு வழக்கமான ரெயிலை நம்பி இருக்காமல், கொங்கன் ரெயில்வே இயக்கும் இந்த சிறப்பு ரெயில்களில் பயணச்சீட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.